புதுடெல்லி,
மேற்காசிய போரால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்கள், குறிப்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் 2.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உத்தரவாத திட்டத்தை அரசு பரிசீலித்து வருகிறது.
இதுகுறித்து மத்திய அரசின் தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:-
நிறுவனங்கள் வாங்கும் கடன்களுக்கு, 2.50 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் உத்தரவாதம் அளிப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ், மேற்காசிய போரால் ஏற்படும் பாதிப்புகள் காரணமாக நிறுவனங்கள் கடன் தவணையை கட்ட தவறினால், 100 கோடி ரூபாய் 5 வரையிலான கடன்களுக்கு கிட்டத்தட்ட 90 சதவீதம் திருப்பி அளிப்பதற்கான உத்தரவாதத்தை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அரசு வழங்கும்.
அரசுக்கு சொந்தமான தேசிய கடன் உத்தரவாத வாயிலாக இந்த உத்தரவாதம் வழங்கப்படும். இத்திட்டத்துக்காக, அரசு 17,000 கோடி முதல் 18,000 கோடி ரூபாய் வரை ஒதுக்கீடு செய்ய வேண்டியிருக்கும். இவ்வாறு தெரிவித்தன.
எம்.எஸ்.எம்.இ., துறை பெற்ற கடன் 47.80 லட்சம் கோடி ரூபாயாக உயர்வு:-
'சி.ஆர்.ஐ.எப் ஹை மார்க்' 'சிட்பி' நிறுவனங்கள் கூட்டாக வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
நாட்டின் சிறுதொழில் துறைக்கு கடன் வழங்கும் சூழல், 2025ல் வேகம் பெற்றுள்ளது. எம்.எஸ். எம்.இ., துறைக்கு கடந்த ஆண்டு டிசம்பர் வரை 47.80 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14.90 சதவீத ஆண்டு வளர்ச்சி ஆகும். இதில் 5 கோடி ரூபாய் வரை கடன்பெற்றுள்ள நிறுவனங்களின் தரவுகள் ஆராயப்பட்டுள்ளன. சிறுதொழில் கடன் நிலுவையில் 80 சதவீதம் தனி நபர் வணிகர்களால் பெறப்பட்டதாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.