புதுடெல்லி,
போன் எண்ணை பகிராமல் பயனர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் வகையில், வாட்ஸ்அப்பில் அறிமுகப்படுத்தப்பட இருந்த 'யூசர்நேம்' வசதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய வசதி குறித்து முழுமையான விளக்கத்தை 3 நாட்களுக்குள் அளிக்குமாறு மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பான ஆலோசனைகள் முடிவடையும் வரை 'யூசர்நேம்' வசதியை அறிமுகப்படுத்தக் கூடாது என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
வாட்ஸ்அப்பின் புதிய 'யூசர்நேம்' வசதி மூலம், பயனர்கள் தங்களது செல்போன் எண்ணை பகிராமல், விருப்பமான பயனர் பெயரை தேர்வு செய்து மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் வசதி விரைவில் அறிமுகம் ஆக உள்ளது. இதற்காக யூசர் நேம் ரிசர்வ் நடைமுறையையும் வாட்ஸ் அப் தொடங்கியுள்ளது. பயனர்களின் தனியுரிமையை பாதுகாக்கும் வகையில் இந்த வசதி கொண்டு வரப்படும் என்று வாட்ஸ் அப் கூறியது.
ஆனால், இந்த வசதியினால் மோசடிகள் அதிகரிக்கும் என்ற கவலையும் அதிகரித்த்துள்ளது. இந்த நிலையில்தான், மத்திய அரசு தற்காலிகமாக தடை விதித்ததுடன் விளக்கமும் கேட்டுள்ளது. வாட்ஸ் அப் குறுஞ்செய்தி செயலியை உலகம் முழுவதும் சுமார் 300 கோடி பயன்படுத்துகிறார்கள். பேஸ்புக், இன்ஸ்டகிராம் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வரும் மெட்டா நிறுவனம், வாட்ஸ் அப்பை கடந்த 2014-ஆம் ஆண்டு வாங்கியது. இந்த செயலியை இந்தியாவில் மட்டும் 50 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.