புது டெல்லி,
கடுமையான சுற்றுச்சூழல் நிலைமைகளிலும், கடல் மட்டத்திலிருந்து 16,400 அடி உயரம் வரையிலும் செயல்படக்கூடிய, இந்திய விமானப்படையின் உயரடுக்கு சிறப்புப் படைப்பிரிவிற்கான சிறிய ஆளில்லா இலகுரக விமானம் ஒன்றை கொள்முதல் செய்யும் செயல்முறையை பாதுகாப்பு அமைச்சகம் தொடங்கியுள்ளது.
கருட் சிறப்புப்படைகளுக்காக 'மைக்ரோ யுஏவி' அமைப்பைக் கொள்முதல் செய்வது குறித்து அமைச்சகம் சமீபத்தில் தகவல் கோரிக்கை ஒன்றை வெளியிட்டது. தற்போதுள்ள மைக்ரோ அமைப்பைக் காட்டிலும், அதிக உயரப்பகுதிகளில் அதிக நிலைத்தன்மையுடன், மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு மற்றும் இலக்கு கண்டறியும் அம்சத்துடன், சிறப்புப் படைகளுக்கு உகந்த, சிறிய, ராணுவத் தரத்திலான, இலகுரக, எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய அமைப்பு தேவைப்படுகிறது.
இந்த விமானம், மோசமான சுற்றுச்சூழலிலும், கடல் மட்டத்தில் இருந்து 16,400 அடி உயரம் வரையிலும் இயங்கக்கூடியது. அதிக உயரத்திலும், மோசமான வானிலையிலும் கண்காணிப்பு பணியை மேற்கொள்ளும் நோக்கத்தில் இந்த விமானங்களை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது, குறைந்தபட்சம் 15 கி.மீ. தூரத்தில், 60 நிமிடங்களுக்கு குறையாமல் பறந்து கண்காணிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.