புதுடெல்லி,
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசலை உற்பத்தி செலவை விட குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றன. அத னால் அங்கு பெட்ரோல், டீசல் விலை குறைவாக உள்ளது. ஆனால், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கம்பெனிகள் ஆகியவற்றின் தேவைகளுக்கு மொத்த விற்பனை நிலையங்களில் சந்தை விலைக்கு பெட்ரோல், டீசல் விற்கப்படுகின்றன.
உதாரணமாக, டெல்லியில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் டீசல் லிட்டருக்கு ரூ.95.20 ஆக விற்கப்படுகிறது. ஆனால், மொத்த விற்பனை நிலையங்களில் ரூ.134.50 ஆக விற்கப்படுகிறது.
அதனால், வணிக பயன்பாட்டுக்கு தேவைப்படுபவர்கள், சில்லறை விற்பனை நிலையங்களில் மொத்தமாக பெட்ரோல், டீசல் வாங்கிச் செல்வதாக புகார் எழுந்துள்ளது. இதன்காரணமாக சில பகுதிகளில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு எழுந்தள்ளது.
இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் புதிய அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவை தங்களது மொத்த தேவைக்கு சில்லறை விற்பனை நிலையங்களில் மொத்தமாக பெட்ரோல், டீசல் வாங்குவதால், சாதாரண மக்களுக்கு பெட்ரோல், டீசல் கிடைப்பது இல்லை.
எனவே, வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் சில்லறை விற்பனை நிலையங்களில் மொத்தமாக பெட்ரோல், டீசல் வாங்க தடை விதிக்கப்படுகிறது. அவர்கள் தங்களது தேவைக்கு மொத்த விற்பனை நிலையங்களில் வாங்கிக் கொள்ளலாம். இந்த தடை 90 நாட்களுக்கு அமலில் இருக்கும். மறுஉத்தரவு மூலம் இத்தடை நீட்டிக்கப்படலாம்.
மேலும், நாள் ஒன்றுக்கு ஒரு வாகனத்தின் எரிபொருள் டேங்கில் 200 லிட்டருக்கு மேல் நிரப்பக்கூடாது என்று உச்சவரம்பு நிர்ணயிக்கப்படுகிறது. இந்த எரிபொருளை மறுவிற்பனை செய்யக்கூடாது.
சில்லறை விற்பனை நிலையங்களில் வாங்கப்படும் பெட்ரோல், டீசலை யாரும் பதுக்கி வைக்கவோ, கள்ளச்சந்தையில் விற்கவோ, வேறு பயன்பாட்டுக்கு திருப்பி விடவோ அனுமதிக்கக்கூடாது. அவர்கள் மீது மாநில, யூனியன் பிரதேச அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த தடையில் இருந்து எந்த நுகர்வோருக்கும் மத்திய அரசு விலக்கு அளிக்கலாம். இந்த தடையை மீறுவோர் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின்கீழ் தண்டிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.