புதுடெல்லி,
இந்தியாவில் இசட் பிளஸ், இசட், ஒய் மற்றும் எக்ஸ் பிரிவுகளில் விவிஐபிக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அரசியல்வாதிகளுக்கு அச்சுறுத்தல் அடிப்படையில் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. மத்திய உள்துறை அமைச்சகம் அவ்வப்போது தலைவர்களுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பை உறுதி செய்கிறது.
அந்த வகையில் அண்மையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து மத்திய அரசு ஆய்வு மேற்கொண்டது. இதில், பீகார் முன்னாள் முதல் மந்திரியும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிளஸ் பாதுகாப்பை திரும்ப பெற மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்து திரும்ப பெற்றுள்ளது. லாலு பிரசாத் யாதவுக்கு இனி இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும். இந்த இசட் பாதுகாப்பு பிரிவில் மத்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியினை மேற்கொள்வர். இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவுக்கு தேசிய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியை மேற்கொள்வர் என்பது கவனிக்கத்தக்கது.
பீகார் முன்னாள் முதல் மந்திரி ஜித்தன் ராம் மஞ்சிக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு முற்றிலும் திரும்ப பெறப்பட்டுள்ளது. ஜித்தன் ராம் மஞ்சிக்கு இனி மாநில போலீஸாரே பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். அதேபோல் மத்திய மந்திரி ஹரிபாய் பி சவுத்ரிக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிரிவு பாதுகாப்பு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பாக குறைக்கப்பட்டுள்ளது.