ஐதராபாத்,
தெலுங்கானா மாநில முன்னாள் முதல்-மந்திரியும், பாரத ராஷ்டிர சமிதி(பி.ஆர்.எஸ்.) கட்சி தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதா. இவர் முன்னாள் எம்.பி. ஆவார். காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்டத்தில், தனது தந்தையின் நற்பெயரை கெடுத்ததாக தனது உறவினர்கள் ஹரிஷ் ராவ், சந்தோஷ் குமார் ஆகியோர் மீது கவிதா குற்றம் சாட்டியதையடுத்து அவர் பாரத ராஷ்டிர சமிதியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
பின்னர், தனது எம்.எல்.சி. பதவியை ராஜினாமா செய்த கவிதா, ‘தெலுங்கானா ஜக்ருதி’ என்ற கலாசார அமைப்பை தொடங்கி, பொதுப்பிரச்சினைகளில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில் தெலுங்கானா ஜக்ருதியை அரசியல் கட்சியாக மாற்றுவது குறித்து முன்னாள் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருடன் கவிதா ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், தெலுங்கானாவின் பிரச்சினைகளை மையமாக கொண்டு இயங்கும் வகையில் இரு அரசியல் கட்சியை தொடங்கப்போவதாக கவிதா அறிவித்துள்ளார். இதன்படி, வரும் ஏப்ரல் 25-ந்தேதி காலை 10 மணிக்கு ஐதராபாத் அருகே முனீர்பாத் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் தனது புதிய கட்சியின் அதிகாரப்பூர்வ பெயர் மற்றும் கொடியை அறிமுகம் செய்ய உள்ளதாக கவிதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தெலங்கானாவை கைவிட்டு தேசிய அளவில் களமிறங்குவதாக அறிவித்தபோது, பி.ஆர்.எஸ் தனது முக்கியத்துவத்தை இழந்துவிட்டது. இப்போது தெலுங்கானாவில் பிராந்தியக் கட்சி என்று எதுவும் இல்லை. எனவே, நமது ஜாக்ருதி ஒவ்வொரு வீட்டின் கட்சியாக இருக்கும். அதுவே தெலுங்கானாவின் பிராந்தியக் கட்சியாக விளங்கும்.
எங்கள் புதிய கட்சியின் 95 சதவீத கவனம் தெலுங்கானா மற்றும் அதன் பிரச்சினைகள் மீதே இருக்கும். தேசியப் பிரச்சினைகளைக் கையாள கட்சியில் ஒரு தேசியக் குழு இருக்கும். எங்கள் கட்சி எந்தக் கட்சிக்கும் இரண்டாம் தர அணியாக இருக்காது, மாறாக தெலங்கானாவில் முதலிடத்தைப் பிடிக்கும்.
எங்கள் கட்சியில் இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். இத்தனை ஆண்டுகளாக ஆண்களால் உருவாக்கப்பட்ட கட்சிகளையே பெண்கள் பார்த்திருக்கிறார்கள். எங்கள் புதிய கட்சிக்கு பெண்கள் ஆதரவளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.