தேசிய செய்திகள்

கிரெடிட் கார்டு விதிகளில் மாற்றம்: மறைமுக வட்டி, அபராதங்களுக்கு கட்டுப்பாடு-இந்திய ரிசர்வ் வங்கி

கிரெடிட் கார்டின் கடன் உச்சவரம்பை உயர்த்த வங்கிகள் வாடிக்கையாளரின் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மும்பை,

கிரெடிட் கார்டு கட்டணங்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இதன் மூலம் மறைமுக வட்டி மற்றும் அபராதங்கள் விதிப்பதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகளின்படி, கிரெடிட் கார்டு கட்டணங்கள், வட்டி கணக்கீடு, தாமதக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் தெளிவாக வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். மேலும் கிரெடிட் கார்டின் கடன் உச்சவரம்பை உயர்த்த வங்கிகள் வாடிக்கையாளரின் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பகுதியளவு பணம் செலுத்தப்பட்டால் முழுத் தொகைக்கு அல்லாமல் செலுத்தாத தொகைக்கு மட்டும் தாமதக் கட்டணம் விதிக்க வேண்டும் என்றும், பயன்படுத்தாத கிரெடிட் கார்டுகளை வாடிக்கையாளர் கோரிக்கை வைத்த 30 நாட்களுக்குள் ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.