தேசிய செய்திகள்

கேரளா தங்கம் கடத்தல் வழக்கில் 20 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய தங்கம் கடத்தல் வழக்கில் 20 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கடந்த அண்டு ஜூலை மாதம் 5-ந்தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய தேசிய புலனாய்வு முகமை (NIA), பிஎஸ் சரித், ஸ்வப்னா சுரேஷ், பைசல் பரீத், சந்தீப் நாயர் மற்றும் பலர் மீது கடந்த அண்டு ஜூலை மாதம் 10-ந்தேதி வழக்குப்பதிவு செய்தது.

அதனை தொடர்ந்து பெங்களூருவில் மறைந்து இருந்த ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப்பை ஜூலை 11-ந்தேதி என்.ஐ.ஏ. கைது செய்தது. தூதரகத்தின் பெயரை பயன்படுத்தி தங்கம் கடத்திய சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக இன்று சிறப்பு நீதிமன்றத்தில் 20 பேர் மீது தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. மேலும் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் வேலைப்பார்த்த முன்னாள் ஊழியர்கள் ஸ்வப்னா சுரேஷ், பிஎஸ் சரித் ஆகியோர் மீது சட்டவிரோத நடவடிக்கை சட்டத்தின் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூதரகத்தின் பெயரில் தங்கம் கடத்தலுக்கு இவர்கள் இருவரும் முன்னதாக வேலைப்பார்த்ததை பயன்படுத்திக் கொண்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கேடி ரமீஸ், பி. முகமது ஷபி, ஏ.எம். ஜலால், இ.சைதாலவி, பி.டி. அப்து, ராபின்ஸ் ஹமீத், முகமதலி இப்ராஹிம் உள்ள 18 பேர் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம்பிடித்துள்ளது.

SCROLL FOR NEXT