தேசிய செய்திகள்

சத்தீஸ்கார்: கத்தியால் தாக்கியதில் பெண் எம்.எல்.ஏ. காயம்.. போதை ஆசாமி கைது

பெண் எம்.எல்.ஏ.வை தாக்கிய நபரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

குஜ்ஜி,

சத்தீஸ்கார் மாநிலத்தின் குஜ்ஜி சட்டமன்றத் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் காங்கிரஸை சேர்ந்த ஜகான்னி சண்டு சகு. இவர் நேற்று முன்தினம் மாலை ஜோத்கரா கிராமத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது மேடையில் இருந்த அவரை போதை ஆசாமி ஒருவர் தான் வைத்திருந்த கத்தியால் தாக்கினார். இதனால் அவரது மணிக்கட்டில் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அருகில் உள்ள சுகாதார மையத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

பெண் எம்.எல்.ஏ.வை தாக்கிய நபரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவரது பெயர் கைலேஸ்வர் என்றும், அவர் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சியான பா.ஜ.க., "ஆளும்கட்சி எம்.எல்.ஏ.வுக்கே பாதுகாப்பு இல்லை. பொதுமக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்" என்று சாடி உள்ளது.    

SCROLL FOR NEXT