தேசிய செய்திகள்

பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளை வீட்டில் இருந்து வெளியேற்றலாம் - அரசின் அதிரடி முடிவு

பெற்றோரை கவனிக்க தவறினாலோ அல்லது ஏதேனும் ஒரு வகையில் துன்புறுத்தினாலோ, பிள்ளைகளை வீட்டில் இருந்து வெளியேற்ற முடியும்.

லக்னோ,

பெற்றோரை புறக்கணிக்கும் பிள்ளைகளை வீட்டில் இருந்து வெளியேற்ற வகைசெய்யும் வகையில் விதிகளைத் திருத்த உத்தரப் பிரதேச அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

யோகி ஆதித்யநாத்

தங்களைப் பராமரிக்காமலும், மதிக்காமலும் இருக்கும் பிள்ளைகளை தங்கள் வீட்டில் இருந்து வெளியேற்ற முதிய பெற்றோரை அனுமதிக்கும் வகையில், 'உத்தரப் பிரதேச பெற்றோர் மற்றும் முதியோர் பராமரிப்பு மற்றும் நல விதிகள்-2014'-ஐத் திருத்த யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. நேற்று நடைபெற்ற உத்தரப் பிரதேச அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணமில்லா தொலைபேசி எண்

புதிய விதிகளின்படி, வயதான பெற்றோரை கவனிக்க தவறினாலோ அல்லது ஏதேனும் ஒரு வகையில் துன்புறுத்தினாலோ, பிள்ளைகளை வீட்டில் இருந்து வெளியேற்ற முடியும். வயதான பெற்றோரால் நேரில் புகார் அளிக்க முடியாது என்பதால், இது குறித்து புகார் தெரிவிக்க, விரைவில், கட்டணமில்லா தொலைபேசி எண் (toll-free number) அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

30 நாட்களுக்குள் விசாரணை

மாவட்ட கலெக்டரிடம் அளிக்கப்படும் புகார்கள் மீது 30 நாட்களுக்குள் விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இது குறித்த மாதாந்திர அறிக்கையை கலெக்டர்கள் மாநில அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். வயதான பெற்றோரின் உரிமைகளை பாதுகாத்து, அவர்களுக்கு மரியாதையான வாழ்க்கையை வழங்குவதோடு, குடும்பத்தினரிடையே அவர்களை பராமரிக்கும் பொறுப்புணர்வை அதிகரிப்பதே இந்த திருத்தத்தின் முக்கிய நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.