தேசிய செய்திகள்

7 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா வந்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங்

இந்தியா வந்துள்ள அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதுடெல்லி,

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஜின்பிங் டெல்லி வந்துள்ளார்.

ஜி ஜின்பிங்

18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஜின்பிங் தற்போது டெல்லி வந்துள்ளார். ஜின்பிங்குடன் சீன கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக் குழு நிலைக்குழு உறுப்பினரும், கட்சியின் மத்திய குழு அலுவலக இயக்குனருமான காய் கி, சீன வெளியுறவு மந்திரியும், கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான வாங் யி உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.

இந்தியா வந்துள்ள அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு விமான நிலையத்தில் இந்திய பாரம்பரிய கலாச்சார முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் பிரதமர் மோடியை இன்று மாலை 5.45 மணிக்கு சந்தித்து பேச உள்ளார்.

7 ஆண்டுகளுக்கு பிறகு

சீன அதிபர் ஜின்பிங் ஏறத்தாழ 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்துள்ளார். இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் நடைபெற்ற முறைசாரா உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்றார். அதற்கு முன்பு 2016-ம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டிலும், 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது முதல் இந்திய பயணத்தின்போதும் ஜின்பிங் இந்தியா வந்திருந்தார்.

எல்லைப் பிரச்சினை

2020-ம் ஆண்டு கிழக்கு லடாக் பகுதியில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்தியா-சீனா உறவில் நீண்ட காலமாக பதற்றம் நிலவி வந்தது. தற்போது இரு நாடுகளும் பதற்றத்தை தணித்து இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஜின்பிங்கின் இந்திய பயணத்துக்கு முன்னதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீன வெளியுறவு மந்திரி வாங் யி ஆகியோர் கடந்த மாதம் பெய்ஜிங்கில் எல்லைப் பிரச்சினை தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தியா-சீனா உறவு

ஆகஸ்டு 25-ந் தேதி பெய்ஜிங்கில் நடைபெற்ற 25-வது சுற்று சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் 8 அம்ச ஒருமித்த முடிவை எட்டின. எல்லை வரையறை மற்றும் எல்லை நிர்வாகம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை விரைந்து முன்னெடுக்கவும் ஒப்புக்கொண்டன. இதனால் பிரிக்ஸ் மாநாட்டையொட்டி நடைபெறும் மோடி-ஜின்பிங் சந்திப்பு, இந்தியா-சீனா உறவின் எதிர்கால போக்கு குறித்து முக்கிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா-சீனா உறவுகளை நீண்டகால மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் கையாளவும், தகவல் தொடர்பை அதிகரிக்கவும், ஒத்துழைப்பை மேம்படுத்தவும் சீனா தயாராக இருப்பதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறினார்.

SCROLL FOR NEXT