தேசிய செய்திகள்

பருவநிலை பாதிப்பு; மலாவி நாட்டுக்கு ஆயிரம் டன் அரிசி அனுப்பி வைத்த இந்தியா

போதிய விளைச்சலின்றி உணவு பற்றாக்குறையால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

புதுடெல்லி

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மலாவி நாட்டில் எல் நினோ எனப்படும் பருவநிலை பாதிப்பு காணப்படுகிறது. இதனால், கடுமையான வறட்சி ஏற்பட்டு, பயிர் விளைச்சலும் பாதிப்படைந்து உள்ளது. போதிய விளைச்சலின்றி உணவு பற்றாக்குறையால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களுக்கு உதவும் வகையில், இந்தியா சார்பில் ஆயிரம் டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட செய்தியில், உணவு பாதுகாப்புக்காக இந்தியா-மலாவி நாடுகளிடையே கூட்டாண்மை உள்ளது.

எல் நினோ பாதிப்பால் வறட்சி ஏற்பட்டு உணவு பாதுகாப்புக்கான முயற்சிகளில் ஈடுபட்டு வரும் மலாவி நாட்டுக்கு ஆதரவு தரும் வகையில், மராட்டியத்தின் நவ சேவா துறைமுகத்தில் இருந்து ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

உலகளாவிய தெற்கு பகுதியில் கூட்டாளியாக உள்ள நாடுகளுக்கு தொடர்ந்து உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் உதவிடும் வகையில் இந்தியா மீண்டும் செயல்பட்டு உள்ளது என அவர் தெரிவித்து உள்ளார்.