பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பேலஸ் சாலையில் நேற்று மாலை நாகப்பாம்பு ஒன்று படமெடுத்தபடி நின்று கொண்டிருந்தது. சாலையின் நடுவே நின்று கொண்டிருந்த அந்த பாம்பைக் கண்டு வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். ஆனால் அந்த பாம்போ, யாருக்கும் பயப்படாமல் அதே இடத்தில் படமெடுத்து நின்று கொண்டிருந்தது.
இதனால் வாகனங்கள் அந்த வழியாக செல்வதில் இடையூறு ஏற்பட்டு சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இறுதியில் காவல்துறையினர் அங்கு வந்து பாம்பை பத்திரமாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர். சாலையிலிருந்து பாம்பு அகற்றப்பட்ட பிறகு போக்குவரத்து மீண்டும் சீரானது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், பெங்களூரு போக்குவரத்தை கட்டுப்படுத்த புதிதாக ஒருவர் கிடைத்துவிட்டார் என கிண்டலாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.