புது டெல்லி,
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி டெல்லியில் செப்டம்பர் 5-ஆம் தேதி நடத்தவிருந்த போராட்ட பேரணியை ரத்து செய்துள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராடிய மாணவர்கள் மீது நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட அனைத்து எப்.ஐ.ஆர் வழக்குகளையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நீட் முறைகேடுகளுக்கு எதிராக கடந்த ஜூலை 20-ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. அப்போது ஏற்பட்ட திடீர் வன்முறை காரணமாக, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நீட் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், ஜூலை 20 போராட்டம் காரணமாக டெல்லி மற்றும் நாடு முழுவதும் மாணவர்கள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் திட்டவட்டமாக வலியுறுத்தினர்.
மாணவர்களின் தொடர் போராட்டத்திற்கு பணிந்து, மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினமா செய்தார். இதனை தொடர்ந்து, மத்திய மந்திரிகள் ஜே.பி.நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் மாணவர் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து அவசர பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மாணவர்கள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் விரைவில் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று மந்திரிகள் உறுதி அளித்தனர்.
மத்திய மந்திரிகளின் இந்த உறுதியான வாக்குறுதியை ஏற்று கொண்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சி, டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து நடைபெற்று வந்த தங்களது தொடர் போராட்டத்தை முறைப்படி வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.
பழைய வழக்குகளை திரும்ப பெறவும், மாணவர்கள் மீது புதிய வழக்குகளை பதிவு செய்ய கூடாது என்றும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு 3 மாதங்களுக்குள் இழப்பீடு வழங்கவும் மத்திய அரசு ஒப்பு கொண்டுள்ளது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவையும், மத்திய அரசின் சாதகமான பதிலையும் வரவேற்று, ஆசிரியர் தினத்தன்று நடத்தவிருந்த பேரணியை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வாபஸ் பெற்றுள்ளது.