தேசிய செய்திகள்

தோழியை பார்க்க வந்த கல்லூரி மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்.. கடத்தி சென்று துன்புறுத்திய கும்பல்

தலைமைக் காவலரை சஸ்பெண்டு செய்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ஏ.சி.பி. அபிஷேக் குமார் பாண்டே தெரிவித்துள்ளார்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியைச் சேர்ந்த எம்.சி.ஏ. மாணவர் ஆயுஷ் திவிவேதி(23). இவர் தனது நண்பர் அபிஷேக்(22) என்பவருடன் சிவில் லைன்ஸ் பகுதியில் தனது தோழியை பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த சிலர் துப்பாக்கி முனையில் ஆயுஷ் திவிவேதியை மிரட்டி கடத்திச் சென்றுள்ளனர்.

பின்னர் கூப்பர்கஞ்ச் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்திற்கு அருகே ஆள்நாடமாட்டமில்லாத இடத்திற்கு ஆயுஷ் திவிவேதியை அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் அவரது வாயில் சிறுநீர் கழித்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.

மேலும் ஆயுஷை அச்சுறுத்துவதற்காக துப்பாகியால் சுட்டதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான புகாரின் அடிப்படையில் போலீசார் ஹிமான்ஷு யாதவ், ஷுபம் சோன்கர், நந்து துபே, இஷாந்த் சவுகான், ஆயுஷ் மிஸ்ரா, மோகித், ரஜத், தர்மேந்திர யாதவ் மற்றும் பெயர் குறிப்பிடாத 2 நபர்கள் உள்பட மொத்தம் 10 பேரை கைது செய்துள்ளனர்.

இதில் தர்மேந்திர யாதவ் தலைமைக் காவலர் ஆவார். அவர் தற்போது சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கல்யான்பூர் ஏ.சி.பி. அபிஷேக் குமார் பாண்டே தெரிவித்தார். கடந்த அக்டோபர் மாதம் பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கின் தொடர்ச்சியாக தற்போது கல்லூரி மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SCROLL FOR NEXT