புதுடெல்லி,
இந்தியாவின் சமூக, பொருளாதார வளர்ச்சியில் கைத்தறி முக்கிய பங்கு வகிக்கிறது. சுதந்திர போராட்ட காலத்தில் கைத்தறி உள்ளிட்ட உள்நாட்டு பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தி 1905 ஆகஸ்டு 7-ம் தேதி சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது. இதை நினைவுபடுத்துதல், கைத்தறி பொருட்களின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக 2015 ஆகஸ்டு 7-ம் தேதி முதல் தேசிய கைத்தறி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இன்றைய இளைஞர்கள் கைத்தறி ஆடைகளை கொண்டு வீடியோக்களை உருவாக்கி, தேசிய கைத்தறி தினத்தை கொண்டாட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்
மேலும் 1905ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 7-ம் தேதி சுதேசி இயக்கம் தொடங்கப்பட்ட வரலாற்றுவு சிறப்பையும் நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, அந்த நாளில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் ஒன்றிணைந்ததாகவும், இந்தியாவின் கைத்தறி நெசவின் பன்முகத்தன்மையை பிரபலமாக்குவோம் என்றும் குறிப்பிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
தொடர்ந்து அந்த காணொளியில், “தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதே நமது இலக்கு. அதற்காக, மிகச்சிறிய மற்றும் ஏழ்மையான குடும்பங்கள் கூட பொருளாதார ரீதியாக வளம் பெற வேண்டும். ஒவ்வொரு கைத்தறி பொருள் வாங்குதலும் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கும், கைவினை கலைஞர்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்குவதற்கும் பங்களிக்கிறது” என்று தெரிவித்தார்.
தனது மற்றொரு எக்ஸ் வலைதள பதிவில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-
இன்று, தேசிய கைத்தறி தினத்தில், இந்தியாவின் வளமான மற்றும் துடிப்பான கைத்தறி பாரம்பரியத்தை நாம் கொண்டாடுகிறோம். நமது நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களின் திறமை, படைப்பாற்றல் மற்றும் அர்ப்பணிப்புக்கும் நாம் வணக்கம் செலுத்துகிறோம். தலைமுறை தலைமுறையாக, அவர்கள் நமது பாரம்பரியங்களைப் பாதுகாத்து வளப்படுத்தி வருகின்றனர்.
கிராமப்புற மேம்பாடு, பெண்கள் தலைமையிலான வளர்ச்சி மற்றும் தற்சார்பு இந்தியா என்ற கனவை நனவாக்குவதில் ஒரு முக்கிய தூணாக விளங்கும் கைத்தறித் துறைக்கு நமது அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும்.
உங்களுக்குப் பிடித்த கைத்தறிப் பொருட்கள் மற்றும் GRWM காணொளிகளை #NationalHandloomDay என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்திப் பகிருங்கள். இது இத்துறையுடன் தொடர்புடையவர்களை ஊக்குவிக்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.