தேசிய செய்திகள்

வணிக சிலிண்டர் விலை உயர்வு; கேரளாவில் 6-ந்தேதி ஓட்டல் உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு

மாவட்ட தலைநகரங்களில் தர்ணா போராட்டம் நடத்த உள்ளதாக ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

திருவனந்தபுரம்,

வணிக சிலிண்டர்களின் விலை உயர்வு தொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கேரள மாநிலத்தில் வணிக சிலிண்டர்கள் விலை உயர்வை கண்டித்து வரும் 6-ந்தேதி மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளதாக ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கேரள மாநில ஓட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் உரிமையாளர்கள் சங்க தலைவர் ஜெயபால் கூறுகையில், “வணிக சிலிண்டர்களின் விலை 993 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களில் சிலிண்டர் விலை 1,498 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் உணவு உற்பத்தி மற்றும் விநியோகத் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வணிக சிலிண்டர்களின் நியாயமற்ற விலை உயர்வை கண்டித்து மாநிலம் முழுவதும் வரும் 6-ந்தேதி ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகள் மூடப்படும். மாவட்ட தலைநகரங்கள் மற்றும் எண்ணெய் நிறுவன அலுவலகங்கள் முன்பு தர்ணா போராட்டங்கள் நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.