மும்பை,
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூறான கருத்துகளை தெரிவித்ததாகதொடரப்பட்ட புகாரில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2019-ஆம் ஆண்டு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ரத்து செய்ய மும்பை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
இதன்படி நீதிபதி என்.ஆர்.போர்கர் அடங்கிய தனி நீதிபதி அமர்வு, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தது. அதேவேளையில், அவதூறு வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறு கீழ் நீதிமன்றத்திற்கு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவை மேலும் 6 வாரங்களுக்கு நீட்டித்தது.
சுப்ரீம்கோர்டில் மேல்முறையீடு செய்வதற்காக, கால அவகாசத்தை நீட்டிக்குமாறு மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி கோரியிருந்தார். அவதூறு வழக்கு விசாரணையை ஒத்திவைப்பதற்கான உத்தரவின்படி, ராகுல் காந்தி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டிய அவசியம் இருக்காது.
மாஜிஸ்திரேட்டின் உத்தரவில் எந்தவிதமான "தவறான போக்கு அல்லது சட்டவிரோதத்தன்மையும்" இல்லை என்றும், எனவே அதில் தலையிட எந்தக் காரணமும் இல்லை என்றும் நீதிபதி போர்கர் கூறினார். "இந்த உத்தரவில் எந்த குறைபாடும் இல்லை என்று நீதிமன்றம் கருதுகிறது. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று ஐகோர்ட்டு தெரிவித்தது.
பாஜக உறுப்பினராக இருப்பதால், தனது தலைவருக்கு எதிராகக் கூறப்பட்ட கருத்துகளால் தானும் பாதிக்கப்பட்டதாகக் கூறி, ஐகோர்ட்டில் காந்தியின் மனுவை மனுதாரரான எம்.எச். ஸ்ரீஸ்ரீமால் எதிர்த்திருந்தார். குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு எதிராக அல்லாமல் ஒரு தனிநபருக்கு எதிராகவே அந்தக் கருத்துகள் கூறப்பட்டதால், மனுதாரர் பாதிக்கப்பட்ட தரப்பினர் அல்ல என்ற ராகுல் காந்தியின் வாதத்தை கோர்ட்டு ஏற்க மறுத்துவிட்டது.
பாஜக என்பது "குறிப்பிட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அமைப்பு" என்றும், மனுதாரர் ஸ்ரீஸ்ரீமால் 2018 முதல் அக்கட்சியின் தீவிர உறுப்பினராக உள்ளார் என்றும் நீதிபதி போர்கர் குறிப்பிட்டார். பிரதமர் நரேந்திர மோடி பாஜகவின் முக்கிய முகமாகத் திகழ்கிறார்; எனவே, அவருக்கு எதிராகக் கூறப்படும் கருத்துகள் அக்கட்சியின் உறுப்பினர்களைப் பாதிக்காது என்று கூற முடியாது" என்று கோர்ட்டு கூறியது.
கோர்ட்டு தனது உத்தரவைப் பிறப்பித்த பிறகு, ராகுல் காந்தி சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக, 2021-ல் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை மேலும் 8 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று ராகுல் காந்தியின் வழக்கறிஞர் சுதீப் பாஸ்போலா கோரினார். இருப்பினும், எதிர்தரப்பு வழக்கறிஞர் இதை எதிர்த்தார்; மேலும், இவ்வழக்கின் விசாரணை 2021-ம் ஆண்டு முதல் தேக்கமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். இந்நிலையில் நீதிபதி போர்கர் இடைக்கால உத்தரவை 6 வாரங்களுக்கு நீட்டித்தார்.
முன்னதாக ராஜஸ்தானில் செப்டம்பர் 20, 2018 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், பிரதமர் மோடியை அவதூறு செய்யும் வகையில் ராகுல் காந்தி பேசியதாக அப்புகாரில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. பிரதமர் மோடிக்கு எதிரான அந்தப் பேரணியில் பேசியது மட்டுமின்றி, செப்டம்பர் 24, 2018 அன்று தனது தனிப்பட்ட 'எக்ஸ்' வலைதளத்தில் ஒரு காணொளியை வெளியிட்டு, அதே அவதூறு கருத்துகளை ராகுல் காந்தி மீண்டும் தெரிவித்ததாக அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.