தேசிய செய்திகள்

சிக்கன் பிரியாணியில் 'ஈ' புகார்: வாடிக்கையாளருக்கு 10 பிளேட் இலவசமாக வழங்க உத்தரவு

புதுச்சேரியில் சிக்கன் பிரியாணியில் ஈ கிடந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு நஷ்ட ஈடாக ரூ.10 ஆயிரம் மற்றும் வழக்கு செலவாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரியில் உள்ள ஒரு பிரபலமான ஓட்டலில் வாடிக்கையாளர் ஒருவர் சிக்கன் பிரியாணி வாங்கியுள்ளார். அந்த பிரியாணியில் ஒரு ஈ இறந்த நிலையில் இருந்தது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த வாடிக்கையாளர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.

10 பிளேட் பிரியாணி இலவசமாக வழங்க உத்தரவு:

அந்த புகாரை விசாரித்த புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி, பிரியாணி அன்ட் கோ என்ற ஓட்டலின் சேவை குறைபாட்டை உறுதி செய்து உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவில், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு நஷ்ட ஈடாக ரூ.10 ஆயிரம் மற்றும் வழக்கு செலவாக ரூ.3 ஆயிரம் என மொத்தம் ரூ.13 ஆயிரம் வழங்க வேண்டும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தலா 2 பிளேட் வீதம் தொடர்ந்து 5 வாரங்களுக்கு என மொத்தம் 10 பிளேட் பிரியாணியை இலவசமாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.