புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு எதிராக அவதூறான கருத்துகளை பேசியதாக எழுந்த புகாரில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு மக்களவை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாக்கூர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்திருந்தார். மேலும், ராகுல் காந்தியின் பேச்சு நாடாளுமன்ற மரபுக்கு மாறாக இருந்ததாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பா.ஜ.க. எம்.பி. டாக்டர் சஞ்சய் ஜெய்ஸ்வால் சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த புகார்களின் அடிப்படையில் நடவடிக்கையை தொடங்கியுள்ள மக்களவை உரிமைக்குழு, ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்தி வரும் 28-ந்தேதிக்குள் தனது பதில் அல்லது விளக்கத்தை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.