ஈரோடு,
ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் தெப்பக்குளம் பகுதியை சேர்ந்தவர் நந்தினி (வயது 19). ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் சேலத்தை சேர்ந்த வாலிபரை கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்தார். அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அந்த வாலிபரிடம் நந்தினி பேசுவதை தவிர்த்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று இரவு 7.30 மணிஅளவில் நந்தினி வேலை முடிந்த பிறகு தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அவர் வீரப் பன்சத்திரம் சத்தியமூர்த்தி வீதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு மின்தடை ஏற்பட்டு இருந்தது. இதனால் அந்த பகுதி இருட்டாக இருந்தது.
அந்த நேரம் அங்கு வந்த நந்தினியின் காதலன் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து நந்தினியின் கழுத்தில் குத்தினார். இதனால் நிலைகுலைந்துபோன நந்தினியை மீண்டும் கத்தியால் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடோடி வந்தனர். இதையடுத்து அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
நந்தினியின் கழுத்தில் ஒரு கத்தியும், சம்பவ இடத்தில் மற்றொரு கத்தி யும் கிடந்தது. உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த அவரை பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்ற னர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் வீரப்பன்சத்திரம் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் இளம்பெண்ணை காதலன் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.