புதுடெல்லி,
காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின நிகழ்ச்சியில், முழு வந்தே மாதரம் பாடலுக்கு சோனியா காந்தி எதிர்ப்பு தெரிவித்ததாக பாஜக குற்றம்சாட்டிற்கு காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.
டெல்லியிலுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசியத் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் வந்தே மாதரம் பாடலின்போது, சோனியா காந்தி ஆட்சேபனைக்குரிய வகையில் செய்கை செய்ததாக சமூக ஊடகங்களில் வீடியோ வைரலானது. வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திக்குப்பின் உள்ள பத்திகள் பாடப்படுவதை சோனியா காந்தி நிறுத்த முயன்றதாக பாஜகவினர் குற்றஞ்சாட்டி சமூக வலைதளங்களில் விமர்சனங்களை முன் வைத்தனர்.
இந்த நிலையில், பாஜகவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள காங்கிரஸ், கார்கே நீண்டநேரம் நின்று கொண்டிருந்ததால் அவருக்காக நாற்காலியை கொண்டு வருமாறு சோனியாவும் ராகுலும் சைகையில் கூறியதாக விளக்கம் அளித்துள்ளது.