தேசிய செய்திகள்

ஆபாச செயலுக்கு காங்கிரஸ் மன்னிப்பு கேட்பதற்கு பதில் நியாயப்படுத்துகிறது; கிரண் ரிஜிஜு கடும் கண்டனம்

நாட்டு நலனுக்கான பணியின்போது, எந்த அரசு அதிகாரத்தில் இருந்தபோதும், எந்தவோர் அரசியலும் அதில் கலக்க கூடாது என அவர் கூறினார்.

புதுடெல்லி,

டெல்லியில் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டின்போது, இளைஞர் காங்கிரசார் சிலர் மேலாடை இல்லாமல் அரை நிர்வாண கோலத்தில் சென்று போராட்டம் நடத்திய புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இதற்கு பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், மத்திய நாடாளுமன்ற விவகார துறை மந்திரி கிரண் ரிஜிஜு நிருபர்களிடம் இன்று பேசும்போது, ஏ.ஐ. துறையில் உலகளாவிய தலைவர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் இந்தியாவில் குழுமியிருந்த சமயத்தில், அதுவும் இந்தியாவின் தலைமையை புகழ்ந்து கொண்டிருந்தபோது, இளைஞர் காங்கிரசார் ஆபாச செயல்களில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

இது தவறு அல்ல. அது ஒரு குற்றம். நாட்டுக்கு எதிரான மிக பெரிய குற்றம். நாட்டுக்கு எதிராக இந்திய தேசிய காங்கிரஸ் மிக தீவிர குற்றமிழைத்து உள்ளது. சரி இன்று காலையில், அதற்கு சிறிதளவேனும் வருத்தம் தெரிவிப்பார்கள் என பார்த்தோம்.

ஆனால், காங்கிரஸ் கட்சியோ இந்த விசயத்தில் மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக அந்த செயலை நியாயப்படுத்துகிறது. காங்கிரஸ் தலைவர்கள் பலர் அதனை நியாயப்படுத்தி பேசி கொண்டிருக்கின்றனர்.

நாட்டுக்கு அவதூறு ஏற்படுத்த இதுபோன்ற செயலை பயன்படுத்தி கொண்டால், அதனை விட அவமதிப்புக்குரிய வேறு விசயம் எதுவும் இருக்காது என்று கூறினார். நாட்டு நலனுக்கான பணியின்போது, எந்த அரசு அதிகாரத்தில் இருந்தபோதும், எந்தவோர் அரசியலும் அதில் கலக்க கூடாது என அவர் கூறினார்.

SCROLL FOR NEXT