கவுகாத்தி
அசாம் மாநில சட்டசபைக்கு ஏப்ரல் 9-ந்தேதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும். இந்த நிலையில், அசாமில் திப்ரூகார் நகரில் நடந்த அரசியல் பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசும்போது, காங்கிரஸ் கட்சி ஊழல் கறை படிந்த கட்சி என்பது மட்டுமின்றி, வேலை செய்யவும் தயாராக இல்லை. இதன் விளைவாக, அசாமில் உள்ள ஒரு தலைமுறையினர் வேலைவாய்ப்பு எதுவும் இன்றி போராடி வருகின்றனர்.
ஆனால், பா.ஜ.க.-என்.டி.ஏ.வானது ஒற்றுமையாக இணைந்து வேலைக்கான வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. நாட்டின் சக்தி வாய்ந்த ஒன்றாக அசாம் உருமாற வேண்டும் என்று நாங்கள் ஈடுபாட்டுடன் பணியாற்றி வருகிறோம். திப்ரூகார் நகரம் முக்கிய மைய நகராக மாறும் என்றார்.
அசாமில் காங்கிரஸ் ஆட்சியில் எண்ணெய் மற்றும் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டபோது, சுத்திகரிப்பு மற்றும் தொழில் வளர்ச்சியானது மாநிலத்திற்கு வெளியே நடந்தது. இதனால், உள்ளூர்வாசிகள் பொருளாதார பலன்களை பெற முடியாமல் மோசடிக்கு ஆளானார்கள்.
இந்த நிலைமையை பா.ஜ.க. மாற்றி கொண்டிருக்கிறது. இந்த துறைகளில் எல்லாம் அசாம் தற்போது சுயசார்புடன் உள்ளது. சொந்த இயற்கை வளங்களில் இருந்து மாநிலமும், அதன் மக்களும் நேரடி பலன்களை பெறுவது உறுதி செய்யப்பட்டு உள்ளது என்றார்.
நாட்டிலேயே அதிக ஊழல் செய்த கட்சியாக காங்கிரஸ் உள்ளது. காங்கிரசின் முதல் குடும்பம் நாட்டிலேயே அதிக ஊழல் செய்த குடும்பம் என்ற அளவில் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். நேசனல் ஹெரால்டு ஊழலில் டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான நில அபகரிப்பு குற்றச்சாட்டுகளை அவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். உண்மையில் அவர்களே நில ஏ.டி.எம்.களாக செயல்பட்டு வருகின்றனர் என்று எந்தவித பெயரையும் குறிப்பிடாமல் பிரதமர் மோடி குற்றச்சாட்டாக கூறினார்.