புதுடெல்லி,
டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி நேற்று பேரணி சென்ற மாணவர்கள் உள்ளிட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்தினர். அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி, லத்தியால் தாக்கியது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தொடர்ந்து இன்றும் (21.07.2026) இளைஞர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.
இதனிடையே மக்களவை எதிர்க்கட்சித்தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, போராட்டத்தில் காயமடைந்த மாணவர்களை இன்று மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.
பின்னர் ராகுல் காந்தி, ஜந்தர் மந்தர் பகுதியில் போராடி வரும் இளைஞர்களுக்கு ஆதரவாக இன்று பேரணி நடத்தினார்.இதன்படி
காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து ராகுல் காந்தி பேரணி நடத்தினார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொது செயலர்கள் கே.சி. வேணுகோபால், பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் இந்த பேரணியில் கலந்துகொண்டனர்.
ராஜாஜி மார்க் பகுதியில் இருந்து லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் மோடியின் வீடு வரை பேரணியாக சென்ற காங்கிரசார், மோடியின் வீட்டின் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு ஆதரவாகவும், நீட் வினாத்தாள் மோசடி விவகாரத்தில் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் தொடர்பாக பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி முழுக்கமிட்டனர். இதையடுத்து அங்கு வந்த டெல்லி போலீசார், ராகுல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
டர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில், “நேற்று இளம் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைச் செயல்கள் குறித்துப் பதிலளிக்கக் கோரி, நாங்கள் பிரதமர் மோடியின் இல்லத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றோம்.
இவ்விவகாரத்தில் எந்தப் பொறுப்பையும் ஏற்கவோ அல்லது நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்கவோ அரசு விரும்பவில்லை.
இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்ததற்காக பிரதமரும், உள்துறை மந்திரியும் பதவி விலக வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.