தேசிய செய்திகள்

தனியார் நிறுவனங்கள் ஆதார் எண்ணைப் பெறும் அதிகாரமளிக்கும் பிரிவு நீக்கம்; காங்கிரஸ் வரவேற்பு

தனியார் நிறுவனங்கள் ஆதார் எண்ணைப் பெறும் அதிகாரமளிக்கும் பிரிவு நீக்கப்பட்டதை காங்கிரஸ் வரவேற்றுள்ளது.

அரசியல் சாசன அமர்வின்படி ஆதார் செல்லும் என்று உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு, மக்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும், அதற்கு ஏற்றவகையில் ஆதார் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றது.

மேலும் தனியார் நிறுவனங்கள் ஆதார் எண்ணைப் பெறும் அதிகாரமளிக்கும் ஆதார் சட்டத்தில் 57வது பிரிவை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. இதனை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ஆதார் சட்டத்தில் 57-வது பிரிவை நீக்கியதை நாங்கள் வரவேற்கிறோம். ஆதார் எண்ணை கையாளும் அதிகாரத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு மோடி அரசு சட்டவிரோதமாக தகவல்களை வழங்குவதற்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. தகவல்களை எப்படி பாதுகாக்கப்போகிறேன் என்பதை மோடி தெரிவிக்கவேண்டும், ஏற்கனவே எங்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை எப்படி பாதுகாக்கப்போகிறார் என்பதை தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் பேசுகையில், 57-வது பிரிவை ரத்து செய்து, மத்திய அரசால் ஆதார் சட்டம் சென்று மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய கண்காணிப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு ஸ்திரமான தடையை போட்டுள்ளது என்று கூறியுள்ளார்.