தேசிய செய்திகள்

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கட்டிட தொழிலாளி கொலை

பெங்களூருவில், குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கட்டிட தொழிலாளியை கொலை செய்த அவரது நண்பரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பெங்களூரு:

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ஜானேஸ்வர் குமார் என்கிற ராஜ் (வயது 26). இவர் பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா மாரோஹள்ளி கிராமத்தில் தங்கி இருந்து கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். ஜானேஸ்வருடன், மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மிலன் ஆசிம் மாலிக் (31) என்பவரும் வேலை செய்தார். ஒரே இடத்தில் வேலை செய்ததால் 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தனர். மேலும் வேலை செய்யும் இடத்தின் அருகே கூடாரம் அமைத்து 2 பேரும் வசித்து வந்தனர். இந்த நிலையில் வேலை முடிந்ததும் ஜானேஸ்வரும், மிலனும் சேர்ந்து மதுஅருந்தினர்.

அப்போது குடிபோதையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த மிலன் அங்கு கிடந்த செங்கல்லை எடுத்து ஜானேஸ்வரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஜானேஸ்வர் பரிதாபமாக இறந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து நெலமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மிலனை வலைவீசி தேடிவருகின்றனர்.

SCROLL FOR NEXT