தேசிய செய்திகள்

‘பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் சர்வதேச நலன் குறித்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெறும்’ - பிரதமர் மோடி

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் வரும் 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், சீனா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, ஈரான், ரஷியா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை உறுப்பு நாடுகளாக உள்ளன. பெலாரஸ், பொலிவியா, கியூபா, கஜகஸ்தான், மலேசியா, நைஜீரியா, தாய்லாந்து, உகாண்டா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகியவை இணைப்பு நாடுகளாக உள்ளன.

2026-ம் ஆண்டுக்கான பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. "வலிமை, புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான கட்டமைப்பு” என்ற கருப்பொருளில் தலைமைப் பணிகளை முன்னெடுத்து வருகிறது. மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது, பொதுவான முன்னுரிமைகள் மற்றும் உலகளாவிய, பிராந்திய விவகாரங்கள் குறித்து தலைவர்கள் கருத்துகளைப் பரிமாறிக்கொள்வது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

இந்தியா, ஏற்கனவே 2012, 2016 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் தலைமைப் பொறுப்பை வகித்துள்ளது. தற்போது 4-வது முறையாக 2026-ம் ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. மேலும், பிரிக்ஸ் அமைப்பு தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடையும் ஆண்டாக இந்த மாநாடு அமைந்துள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் வரும் 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் உள்பட பிரிக்ஸ் உறுப்பு நாடுகள், கூட்டாளர் நாடுகள் மற்றும் அழைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் சர்வதேச நலன் குறித்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இன்னும் சில நாட்களில், பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டிற்காக பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இந்தியாவில் ஒன்றுகூடுவார்கள். இந்த உச்சிமாநாட்டில் உலக நலன் குறித்த பொதுவான விருப்பத்துடன், பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆக்கபூர்வமான மற்றும் அர்த்தமுள்ள விவாதங்கள் நடைபெறும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT