தேசிய செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை: மத்திய அமைச்சரவையில் மாற்றம்?

உ.பி, குஜராத், கோவா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் முக்கியத்துவம் கொடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

புதுடெல்லி,

பரபரப்பான அரசியல் மற்றும் பொருளாதார சூழலுக்கு மத்தியில், பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை 4.30 மணிக்கு டெல்லியில் உள்ள சேவா தீர்தத்தில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து மத்திய மந்திரிகள் டெல்லியிலேயே தங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சர்வதேச நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதும் பிரதமர் மோடி நடத்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில், மத்திய மந்திரிகள், தனி பொறுப்பு வகிக்கும் இணை மந்திரிகள் மற்றும் பிற இணை மந்திரிகளும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ந்து நிலவும் போர் பதற்றம், அதனால் இந்தியாவில் ஏற்படும் பொருளாதார தாக்கம் தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பெரிய அளவில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல் உடனடியாக முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறிகளும் இல்லாத நிலையில், எரிபொருள் விலை அதிகரிப்பு, எரிபொருள் விநியோகச் சங்கிலி பாதிப்பு மற்றும் பணவீக்கம் தொடர்பான கவலைகள் நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும், அதுதொடர்பான ஆலோசனைகளும் இன்றைய கூட்டத்தில் இடம்பெறலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவை மற்றம் மற்றும் விரிவாக்கம் ஜுன் இரண்டாவது வாரத்திற்குள் நிகழ வாய்ப்புள்ளதாக மத்திய அரசின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.