ஐதராபாத்
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரான கார்கே, சமீபத்தில் பிரதமர் மோடி பற்றி பேசும்போது அவரை பயங்கரவாதி என குறிப்பிட்டது சர்ச்சையானது.
இந்த நிலையில், தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் கோதி எக்ஸ் சாலையில், கார்கேவுக்கு எதிராக பா.ஜ.க. தொண்டர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், பிரதமர் மோடிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக கார்கேவுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், அவர் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
அப்போது கார்கேவின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். அதனை போலீசார் தடுக்க முயன்றனர். அப்போது, பா.ஜ.க. தொண்டர்கள் மற்றும் போலீசாருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுபற்றி பா.ஜ.க.வின் கோஷாமகால் தலைவர் கணேஷ் கூறும்போது, காங்கிரஸ் எப்போதும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கிறது.
அந்த கட்சி பயங்கரவாதத்திற்கு உதவி செய்கிறது. பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். அல்லது பா.ஜ.க. ஆகியோரை பற்றி பேசுவதற்கு முன்பு, கார்கே அவருடைய நாவை கட்டுப்படுத்த வேண்டும் என்றார். இந்த விசயத்தில், அவர் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க. தொண்டர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்த விசயத்தில் சென்னையில் நான் விளக்கம் அளித்து தெளிவுப்படுத்தி விட்டேன் என கார்கே கூறினார். தமிழகத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கார்கே, பிரதமர் மோடியை பயங்கரவாதி என அழைத்தது சர்ச்சையானது.
எனினும், தன்னுடைய எதிரிகளை அச்சுறுத்த மத்திய அமைப்புகளை பிரதமர் மோடி தவறாக பயன்படுத்துகிறார் என்று பின்னர் தெளிவுப்படுத்தினார். இதனை தொடர்ந்து, கார்கேவுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. புகார் ஒன்றை அளித்துள்ளது. அவர் மன்னிப்பு கேட்கவும் வலியுறுத்தி உள்ளது.