தேசிய செய்திகள்

முதல்-மந்திரியாவது பற்றி சர்ச்சை பேச்சு... மணிசங்கர் அய்யர் கட்சியிலேயே இல்லை என காங்கிரஸ் பதில்

பினராயி விஜயன் கேரளாவில் முதல்-மந்திரியாக தொடர்வார் என்பது மணிசங்கர் அய்யரின் தனிப்பட்ட கருத்து என வேணுகோபால் கூறினார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி செய்து வருகிறது. நடப்பு ஆண்டில் கேரளா சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில், திருவனந்தபுரம் நகரில் கேரள அரசு சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது.

இந்நிலையில், பஞ்சாயத்து ராஜுக்கான முன்னாள் மத்திய மந்திரி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மணி சங்கர் அய்யர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் பேசும்போது, பஞ்சாயத்து ராஜில் இந்தியாவில் தலைவராக கேரளா உள்ளது. என்னுடைய கட்சியினர் இதில் கலந்து கொள்ளாததற்காக நான் அதிகம் வருந்துகிறேன் என்றார்.

கேரளாவில் உறுதியாக பினராயி விஜயன் மீண்டும் முதல்-மந்திரியாக வருவார் என அப்போது கூறினார். இந்த நிகழ்ச்சி தேர்தலை முன்னிட்டு விளம்பர நோக்கில் நடத்தப்படும் ஒன்று என கூறி, காங்கிரசின் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதாலா, நிகழ்ச்சியை புறக்கணிக்கும்படி கட்சியின் சக தலைவர்களிடம் கேட்டு கொண்டார்.

அய்யர் மற்றும் அமர்தியா சென் போன்றோரை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என கேட்டு கொண்ட நிலையில், அவர் பங்கேற்றது மட்டுமின்றி விஜயனே மீண்டும் ஆட்சியை தக்க வைப்பார் என கூறியது காங்கிரஸ் கட்சியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பினராயி விஜயன் முதல்-மந்திரி ஆவது பற்றிய மணிசங்கர் அய்யரின் பேச்சு பற்றி, கட்சியின் பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் நிருபர்களிடம் இன்று பேசினார். அப்போது அவர், பினராயி விஜயன் கேரளாவில் முதல்-மந்திரியாக தொடர்வார் என்பது மணிசங்கர் அய்யரின் தனிப்பட்ட கருத்து. அது கட்சியின் பார்வை அல்ல. அவர் காங்கிரசில் இல்லை என கூறினார்.

இதேபோன்று மற்றொரு காங்கிரஸ் தலைவரான ரமேஷ் சென்னிதாலா கூறும்போது, மணிசங்கர் அய்யர் கட்சியிலேயே இல்லை என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கேரா தெளிவாக கூறியிருக்கிறார் என்றார். அவர் கட்சியில் இல்லாதபோது அவரை பற்றி நான் என்ன கூற வேண்டியுள்ளது? என்றும் பதிலாக கூறினார்.