புதுச்சேரி,
புதுச்சேரி சட்டசபையில் ரூ9,924 கோடிக்கு பட்ஜெட்டை அம்மாநில முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்தார்.
இதனையடுத்து சட்டசபையில் பேசிய முதல்-அமைச்சர் ரங்கசாமி, மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ6,190 கோடியாக உள்ளது. தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என உறுதியளிக்கிறேன். தமது ஆட்சி பொறுப்பேற்க உறுதுணையாக இருந்த பிரதமருக்கு நன்றி. புதுச்சேரியில் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ5,000 உற்பத்தி மானியம் வழங்கப்படும்.
விவசாயத்தில் ஈடுபடும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 50% மானியம் வழங்கப்படும். புதுச்சேரியில் புதிதாக உழவர் சந்தைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கப்படும். புதுச்சேரி ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய், தானியங்கள் வழங்கப்படும். ஆடுகள் வாங்க தேசியமயமாக்கப்பட்ட வங்கிள் மூலம் கடன் வழங்கப்படும். கறவை மாடுகளை பராமரிக்கவும், கூட்டுறவு சங்கங்களில் இல்லாதவர்களுக்கு 75% மானியத்தில் தீவனம் தரப்படும்.
புதுவையில் பால் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதுள்ள தினசரி 1.22 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியை, 1.75 லட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ரூ. 40 கோடி ஒதுக்கப்படுகிறது. புதுவையில் கல்வித்துறை க்கு ரூ.742.81கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆசிரியர்கள் பற்றாக்குறையைப் போக்க, தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். நிதி தட்டுப்பாடு உள்ள நிலையிலும் பெட்ரோல் மீதான வரியை குறைத்துள்ளோம்.
கூட்டுறவு வங்கியில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பாட்கோவில் மாணவர்கள் பெற்ற கடன்கள் ரத்து செய்யப்படும். ஆன்லைன் முலம் பட்டா மாற்றும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.