பெங்களூரு,
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை சுப்ரீம் கோர்ட்டால் விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். சிறை தண்டனை காலம் நிறைவடைந்ததை அடுத்து சசிகலா கடந்த 27-ந் தேதி பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவனையில் இருந்தபடியே விடுதலை செய்யப்பட்டார். ஆயினும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் தொடர்ந்து விக்டோரியா மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது ரத்த அழுத்தம் திடீரென அதிகரித்தது. இதனால் அவருக்கு ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அவருக்கு சர்க்கரை பிரச்சினையும் கட்டுக்குள் வராமல் இருந்தது. இந்த நிலையில் அவரது ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற அனைத்து பிரச்சினைகளும் கட்டுக்குள் வந்துள்ளன.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 10 நாட்கள் ஆவதால் சசிகலாவுக்கு மீண்டும் ஒருமுறை சி.டி.ஸ்கேன், ஆர்.டி.பி.சி.ஆர். மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன் முடிவுகள் வந்த பிறகே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படும் தேதி குறித்து கூற முடியும் என்றும் அவருக்கு தொற்று இல்லை என தெரியவந்தால், உடனடியாக வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.