ஜோத்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் மூலாராம் (வயது 33). இவர், பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மாண்டோர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அதே சிறையில் உள்ள மும்பையைச் சேர்ந்த சீமா காட்ஸே (31), தனது கணவரைக் கொலை செய்த வழக்கில் 2019-ம் ஆண்டு முதல் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.
சிறையில் விவசாயம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டபோது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியது. இதையடுத்து, திருமணம் செய்து கொள்ள அனுமதி கோரி அவர்கள் ஐகோர்ட்டை அணுகினர். இந்த மனுவை விசாரித்த ராஜஸ்தான் ஐகோர்ட்டு, இந்திய அர சியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவின்படி, திருமணம் செய்து கொள்வது என்பது வாழ்வுரிமை மற்றும் தனிநபர் சுதந்திரத்தின் ஒரு பகுதியாகும் என்று கூறியது.
இதையடுத்து, மாண்டோர் சிறை வளாகத்திலேயே திருமணம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. திருமண நிகழ்ச்சியில் பூசாரி உள்பட அதிகபட்சம் 21 குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் திருமணத்திற்கான அனைத்து செலவுகளையும் மணமகன் மூலாராம் ஏற்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.