புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் மாதம் 14-ம் தேதி கூடுகிறது. இந்த மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 1-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கூட்டத்தொடரின் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்டவைப் போன்ற பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதற்கான நடைமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன.
இரு அவைகளிலும் உறுப்பினர்களுக்கு இருக்கை அமைப்பதில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் முதன்முறையாக பெரிய திரைகள் உள்ளிட்டவை பயன்படுத்தப்படவுள்ளது.
இந்நிலையில் சபாநாயகர் ஓம்.பிர்லா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
கோவிட் -19 உலகெங்கிலும் உள்ள ஜனநாயக நிறுவனங்களின் செயல்பாட்டிற்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது.
மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு 3 நாள் முன்பு எம்.பிக்கள் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். எம்.பிக்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள நாடாளுமன்ற வளாகத்திலேயே வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கோவிட்-19 தொடர்பான வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம் (மான்சன்) அமர்வின் செயல்பாட்டில் உறுப்பினர்கள் ஒத்துழைப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.