தேசிய செய்திகள்

வாட்ஸ்அப்பின் புதிய தலைமை செயல் அதிகாரியாக கிரெட் நிறுவனர் குணால் ஷா நியமனம்

இந்தியாவில் மிக முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கிரெட்டை அவர் கட்டமைத்தார் என மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்தார்.

புது டெல்லி,

இந்திய தொழில்நுட்ப மற்றும் ஸ்டார்ட்அப் வரலாற்றிலேயே மிக முக்கிய மைல்கல்லாக, பிரபல பின்டெக் நிறுவனமான கிரெட் (CRED) நிறுவனர் குணால் ஷா, வாட்ஸ்அப்பின் புதிய உலகளாவிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைமை பொறுப்பு

மெட்டா நிறுவனம் கிரெட்டில் சுமார் இந்திய மதிப்பில் சுமார் ரூ.8,550 கோடி முதலீடு செய்து, அந்த நிறுவனத்தின் 20 சதவீத பங்குகளை கைப்பற்றியுள்ள நிலையில் இந்த தலைமை பொறுப்பு மாற்றம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

3 கோடி பயனர்

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் வாட்ஸ்அப் நிறுவனத்தை வெற்றிகரமாக வழிநடத்தி, அதன் பயனர் எண்ணிக்கையை 3 கோடிக்கும் மேல் உயர்த்திய தற்போதைய தலைவர் வில் கேத்கார்ட் தனது பதவியிலிருந்து விலகுகிறார்.

மார்க் ஜுக்கர்பெர்க்

இந்த நியமனம் குறித்து மெட்டா சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க் வெளியிட்டுள்ள பதிவில், "குணால் ஷா மெட்டா நிறுவனத்தில் வாட்ஸ்அப்பின் அடுத்த தலைவராக இணையவுள்ளார். இந்தியாவில் மிக முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கிரெட்டை அவர் கட்டமைத்தார். உலகின் மிகப்பெரிய மெசேஜிங் செயலியை இயக்குவதற்கு தேவையான பில்டர் மென்டாலிட்டியும், உலகளாவிய பார்வையும் அவரிடம் உள்ளது.

பல கோடி கணக்கான மக்கள் மற்றும் லட்ச கணக்கான வணிகங்களுக்கு வாட்ஸ்அப்பை சிறந்த சேவையாக மாற்ற அவருடன் இணைந்து பணியாற்ற எதிர்நோக்கியுள்ளேன்." என்று மனதார பாராட்டியுள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளர்.