தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக கே.எம். ஜோசப்பை நியமிக்க மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரைக்க முடிவு

சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக கே.எம். ஜோசப்பை நியமிக்க மத்திய அரசுக்கு மீண்டும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான கொலிஜியம் பரிந்துரை செய்து உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி

உத்தரகாண்ட் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கே.எம். ஜோசப், மூத்த பெண் வக்கீல் இந்து மல்கோத்ரா ஆகிய 2 பேரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமனம் செய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான மூத்த நீதிபதிகளை கொண்ட குழு (கொலிஜியம்) மத்திய அரசுக்கு கடந்த ஜனவரி மாதம் 22-ந் தேதி பரிந்துரை செய்தது.

ஆனால் பெண் வக்கீல் இந்து மல்கோத்ரா மீதான பரிந்துரையை ஏற்ற மத்திய அரசு, கே.எம். ஜோசப் மீதான பரிந்துரையை ஏற்காமல், சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியத்தின் மறுபரிசீலனைக்கு கடந்த 26-ந் தேதி திருப்பி அனுப்பியது.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அகில இந்திய அளவில் ஐகோர்ட்டு நீதிபதிகளின் ஒருங்கிணைந்த பணிமூப்பு பட்டியலில் கே.எம். ஜோசப்பின் பெயர் 45-வது இடத்தில்தான் உள்ளது, தவிரவும் கேரளாவுக்கு போதுமான பிரதிநிதித்துவம் உயர்நீதித்துறையில் அளிக்கப்பட்டு உள்ளது என்பது உள்ளிட்ட காரணங்களை சொல்லி மத்திய அரசு நியாயப்படுத்தியது.

இந்த நிலையில், கே.எம். ஜோசப் மீது ஏற்கனவே செய்த பரிந்துரையை மறு ஆய்வு செய்வதற்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் கொலிஜியம் மே 2 ந்தேதி கூடியது. இதில் மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் பங்கேற்றனர்.

கே.எம். ஜோசப் பரிந்துரை கோப்பை மத்திய அரசு திருப்பி அனுப்பியது குறித்து, கொலிஜியத்தில் இடம் பெற்றிருந்தவர்கள் விவாதித்தனர். ஆனால் இதில் எந்த முடிவும் எடுக்கவில்லை. முடிவை கொலிஜியம் ஒத்திவைத்து விட்டது. இது சுப்ரீம் கோர்ட்டு இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் கொலிஜியம் இன்று கூடி ஆலோசனை நடத்தியது. அப்போது சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக கே.எம். ஜோசப்பை நியமிக்க மத்திய அரசுக்கு மீண்டும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான கொலிஜியம் பரிந்துரைக்க ஒரு மனதாக முடிவு செய்து உள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்