தேசிய செய்திகள்

சத்தீஷ்காரில் ஊரடங்கு உத்தரவு மே 31 வரை நீட்டிப்பு

சத்தீஷ்காரில் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவை மே 31 வரை நீட்டித்து அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

ராய்ப்பூர்,

சத்தீஷ்காரில் கொரோனா பாதிப்பு உயர்வை முன்னிட்டு கடந்த ஏப்ரல் தொடக்கத்தில் மாநிலம் முழுவதற்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தளர்வுகளுடன் கூடிய இந்த ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த 4ந்தேதி இந்த உத்தரவானது மே 15ந்தேதி நள்ளிரவு வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு ஆளும் அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, சத்தீஷ்காரில் கொரோனா பாதிப்பு உயர்வை முன்னிட்டு ஊரடங்கு உத்தரவை மே 31 வரை நீட்டித்து அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து, மளிகை பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை விற்பனை செய்யும் கடைகள் மாலை 5 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்படும்.

இதேபோன்று சந்தையில் உள்ள கடைகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் மாற்றம் எதுவும் தேவைப்பட்டால் வர்த்தக அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி ஆட்சியர்கள் மற்றும் போலீசார் முடிவு செய்வார்கள்.

அனைத்து கடைகளும் வேலை நாட்களில் 5 மணிக்கு பின்னர் அடைக்கப்படும். மாநிலத்தில் ஊரடங்கு நீக்கப்படாது. கொரோனா தொற்று சூழ்நிலை அடிப்படையில், தளர்வுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SCROLL FOR NEXT