தேசிய செய்திகள்

தகனம் செய்வதற்கு முன் திடீரென கண் விழித்த பெண் - அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்

வீட்டிலேயே உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த புஜ்ஜி அம்மாள் திடீரென அசைவற்று போனார்.

கவுகாத்தி,

ஒடிசா மாநிலம், கஞ்சமின் மாவட்டத்தில் உள்ள பெர்ஹாம்பூர் நகரில் வசிப்பவர் புஜ்ஜி அம்மா (52). வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தால், அவரது உடலில் 50 சதவிகிதத்துக்கும் மேல் தீக்காயம் ஏற்பட்டிருக்கிறது.

உடனே அவரை மீட்ட அவரின் குடும்பத்தார், எம்.கே.சி.ஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்திருக்கின்றனர். அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், உயர் சிகிச்சைக்குத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க அறிவுறுத்தியிருக்கின்றனர்.

ஆனால், ஏழ்மையான குடும்பம் என்பதால் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டுக்குக் கொண்டு வந்தனர். இதற்கிடையில், வீட்டிலேயே உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த புஜ்ஜி அம்மாள் கடந்த 12-ம் தேதி திடீரென அசைவற்று மூச்சுப்பேச்சற்று இருந்திருக்கிறார். இதனால் அவர் இறந்திருக்கக்கூடும் என நினைத்த குடும்பத்தார் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்து, இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகளையும் செய்திருக்கின்றனர்.

அவர் இறந்ததை மருத்துவரிடம் அணுகி உறுதி செய்யாமல் இறப்புச் சான்றிதழைப் பெறாமல் பெர்ஹாம்பூர் முனிசிபல் கார்ப்பரேஷனின் அனுமதியில்லாமல் புஜ்ஜி அம்மா சடலத்தை பிஜிபூரில் இருக்கும் மயானத்துக்குச் வாகனத்தில் வைத்து எடுத்துச் சென்றிருக்கின்றனர். தகனம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது புஜ்ஜி அம்மா திடீரென கண்களைத் திறந்துபார்த்து எழுந்ததும் சூழ்ந்திருந்த புஜ்ஜியின் உறவினர்கள் பயம் கலந்த அதிர்ச்சியில் உறைந்துபோயினர்.

அதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் உள்ளூர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு அந்த வாகனத்திலேயே மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மீண்டும் எம்.கே.சி.ஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.