தேசிய செய்திகள்

ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

ஆன்லைன் மூலம் புதுப்பிப்பதற்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது.

ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை இலவசமாக புதுப்பிக்கும் வசதிக்கான கால அவகாசத்தை மத்திய அரசு மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டித்துள்ளது. இதன்படி, பொதுமக்கள் தங்களது பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம் உள்ளிட்ட விவரங்களில் மாற்றம் இருந்தால், மை ஆதார் இணையதளம் மூலம் ஆன்லைனில் இலவசமாக புதுப்பித்து கொள்ளலாம்.

முன்னதாக இந்த சலுகை வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைய இருந்த நிலையில், தற்போது அது 2027 ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் எடுத்து இதுவரை எந்த மாற்றமும் செய்யாதவர்கள், தங்களது ஆவணங்களை புதுப்பிக்குமாறு யுஐடிஏஐ தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆன்லைன் மூலம் புதுப்பிப்பதற்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. ஆனால் ஆதார் சேவை மையங்களுக்கு நேரில் சென்று விவரங்களை மாற்ற விரும்புவோர் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும். மக்களின் ஆதார் தகவல்கள் துல்லியமாகவும் புதுப்பித்த நிலையிலும் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.