புதுடெல்லி,
மத்திய உள்துறை மந்திரி அறிக்கை அளிக்கும் வரை நாடாளுமன்ற முடக்கம் தொடரும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மழைக்காலக் கூட்டத்தொடர் நிறைவடைய இன்னும் மூன்று நாள்களே உள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் நிலவும் முட்டுக்கட்டையால் பெண்கள் இட ஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை மற்றும் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம் தொடர்பான முக்கிய மசோதாக்களின் நிலை நிச்சயமற்றதாக உள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் 16-வது நாளான இன்று காலை 11 மணிக்கு அவை நடவடிக்கைகள் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டங்களால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சில நிமிடங்களில் மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் மதியம் 12 மணிக்கு இரு அவைகளும் மீண்டும் கூடின.
இந்தநிலையில், மத்திய உள்துறை மந்திரி அறிக்கை அளிக்கும் வரை நாடாளுமன்ற முடக்கம் தொடரும் என்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பிரியங்கா காந்தி கூறினார்.
வரும் 13-ம் தேதியுடன் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.