தேசிய செய்திகள்

உயர் சிகிச்சைக்காக உம்மன் சாண்டியை பெங்களூருவுக்கு அழைத்து செல்ல முடிவு - காங்கிரஸ் கட்சி தகவல்

உயர் சிகிச்சைக்காக உம்மன் சாண்டியை பெங்களூருவுக்கு அழைத்து செல்ல முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி உடல் நலக்குறைவு காரணமாக நெய்யாற்றின்கரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு நிமோனியா இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் அவரை உயர் சிகிச்சைக்காக பெங்களூருவுக்கு அழைத்துச்செல்ல காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, 'அவர் (உம்மன் சாண்டி) சிறிது சோர்வாக இருக்கிறார். தற்போது அவர் நிமோனியாவில் இருந்து மீண்டுவிட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். நான் அவரை சந்தித்தேன். அவர் பெங்களூரு அழைத்துச்செல்லப்படுவார். அவரது பயணம் மற்றும் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் மேலிடம் செய்யும்' என கூறினார்.

முன்னதாக உம்மன் சாண்டிக்கு தகுந்த சிகிச்சை அளிக்கவில்லை என அவரது சகோதரர் உள்ளிட்ட உறவினர்கள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கும் அவர்கள் கடிதம் எழுதியிருந்தனர்.எனினும் இந்த குற்றச்சாட்டை உம்மன் சாண்டியின் மகன் மற்றும் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT