முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 62-வது நினைவு நாளான இன்று காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, கார்கே உள்ளிட்டோர் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக ராகுல்காந்தி தனது ‘எக்ஸ்’ சமூக வலைதள பதிவில் கூறியதாவது:- நாட்டின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளில் அவருக்கு எனது அஞ்சலியை செலுத்தியை கொள்கிறேன். நவீன இந்தியாவின் வலுவான அடித்தளத்தை அமைத்ததுடன், ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் முன்னேற்றம் கொண்ட இந்தியாவை உருவாக்க தனது முழு வாழ்க்கையையும் அவர் அர்ப்பணித்தார்.
சுதந்திரம், ஜனநாயகக் கொள்கைகள், அரசியலமைப்பு உரிமைகள், சமூக நீதி மற்றும் அறிவியல் மனப்பான்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட அவரது தொலைநோக்கு தலைமைத்துவம், இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் என்றும் வழிகாட்டியாக இருக்கும்,” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 16 ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமராக பதவி வகித்தார்.1964 ஆம் ஆண்டு மே 27-ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். அதன் பின்னர், லால் பகதூர் சாஸ்திரி இந்தியாவின் இரண்டாவது பிரதமராக பொறுப்பேற்றார். இந்தியாவின் அணிசேரா இயக்கம் உருவாக முக்கிய முன்னோடியாக நேரு கருதப்படுகிறார். நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14 இந்தியாவில் ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.