லக்னோ,
மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு அவதூறு கருத்து கூறியதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது விஜய் மிஸ்ரா என்பவர் உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இதில் ராகுல் காந்தியின் குரல் மாதிரி சோதனைக்கோரி தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை, கால தாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறி கூடுதல் மாவட்ட நீதிபதி ராகேஷ் யாதவ் தள்ளுபடி செய்தார். இதற்கிடையே, 2020-ம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்திய ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை ' வழக்கில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட ரவி, ராம்குமார், லவ் குஷ் ஆகிய மூவரும் ராகுல் காந்திக்கு எதிராக ரூ.1.50 கோடி இழப்பீடு கேட்டு ஹத்ராஸ் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தனர்.
கடந்த டிசம்பரில் பூல்கர்ஹி சென்ற ராகுல் காந்தி, குற்றவாளிகள் வெளியில் சுதந்திரமாக சுற்றுவதாகப் பேசி தங்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட நீதிபதி விஜய் குமார், ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு. அடுத்த விசாரணையை ஆகஸ்டு மாதம் 11-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.