தேசிய செய்திகள்

அகிலேஷ் யாதவின் மகளுக்கு எதிராக அவதூறு விமர்சனங்கள்... உடனடி நடவடிக்கை எடுத்தோம்: யோகி ஆதித்யநாத்

அகிலேஷின் மகள் அதிதி யாதவ் பற்றி குற்ற செயல்கள் மற்றும் திருட்டு தொடர்பாக பொய்யான தகவல்கள் பதிவிடப்பட்டு உள்ளன என கூறப்படுகிறது.

கான்பூர்

உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவை சுட்டி காட்டி பேசினார். அவருடைய மகளுக்கு எதிராக சமீபத்தில் சிலர் அவதூறு விமர்சனங்களை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளனர்.

இதனை குறிப்பிட்டு பேசிய முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், என்னுடைய கவனத்திற்கு இந்த செய்தி வந்ததும், உடனடியாக எப்.ஐ.ஆர். பதிவு செய்யும்படி போலீசாரை அறிவுறுத்தினேன். ஒரு மகளுக்கு எதிரான அவதூறு விமர்சனங்களை சகித்து கொள்ள கூடாது.

ஒரு கிராமத்தின் மகளானவள் எல்லோருடைய மகளும் ஆவார். ஒரு கிராமத்தின் சகோதரி எல்லோருடைய சகோதரியும் ஆவார். அதில் நாம் வேற்றுமை பார்க்க கூடாது என்று கூறினார்.

குற்ற செயல்கள் மற்றும் திருட்டு

தொடர்ந்து அவர், ஆனால் பேசும்போது கட்டுப்பாட்டுடன் பேசும்படி உங்களுடைய தொண்டர்களுக்கு கற்று கொடுங்கள் என்று அகிலேசுக்கு அறிவுரையும் கூறினார். அகிலேஷின் மகள் அதிதி யாதவ் பற்றி குற்ற செயல்கள் மற்றும் திருட்டு தொடர்பாக பொய்யான தகவல்கள் பதிவிடப்பட்டு உள்ளன என கூறப்படுகிறது.

அவருடைய புகைப்படம் ஒன்றை உருமாற்றம் செய்து, அவருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அது பரப்பப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக பிரவீன் யாதவ் என்ற வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தேசிய செயலாளர் அளித்த புகாரின் பேரில் 3 பேருக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.