தேசிய செய்திகள்

டெல்லி: 10 ஆண்டுகளில் காணாமல் போன 1.80 லட்சம் பேர் மீட்பு

டெல்லியில் இதுவரை 1 லட்சத்து 80 ஆயிரத்து 805 பேர் கண்டறியப்பட்டு, அவர்களுடைய குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்துள்ளனர்.

புதுடெல்லி,

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லியின் முன்னாள் முதல்-மந்திரியான கெஜ்ரிவால் சமீபத்தில் கூறும்போது, நாட்டின் தலைநகர் டெல்லியில் ஜனவரி 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை பெண்கள், குழந்தைகள் என 807 பேரை காணவில்லை.

அப்படியென்றால், நாளொன்றுக்கு 54 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களில் பலர் இளம் சிறுமிகள் என கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார். டெல்லியில், மக்களின் பாதுகாப்பு கேள்வியாக உள்ளது. இது அச்சமூட்டும் வகையில் உள்ளது. ஆனால், பா.ஜ.க. அரசோ தூங்கி கொண்டிருக்கிறது என்றும் குற்றச்சாட்டாக கூறினார்.

டெல்லியில் சட்டம் ஒழுங்கு ஐ.சி.யு.வில் உள்ளது என்றும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் உங்களுடைய குழந்தைகளை கவனத்துடன் பாதுகாத்து கொள்ளுங்கள் என்றும் கூறினார். இந்நிலையில், குழந்தைகள் காணாமல் போன விவகாரத்தில் பொதுமக்கள் அச்சமடையவோ, பயப்படவோ வேண்டிய அவசியமில்லை என டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

அவர்கள் வெளியிட்ட தகவலில், டெல்லியில் மக்கள் தொகை அதிகரித்து வரும் சூழலில் 2016-ம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரம் முதல் 24 ஆயிரம் என்ற அளவில் உள்ளது. நடப்பு ஆண்டு ஜனவரியில் 1,777 பேர் காணாமல் போயுள்ளனர் என வழக்குகள் பதிவாகி உள்ளன.

இது மாதத்திற்கு சராசரியாக 2 ஆயிரம் பேர் என்ற எண்ணிக்கையை விட குறைவு ஆகும். இதுவரை 1 லட்சத்து 80 ஆயிரத்து 805 பேர் கண்டறியப்பட்டு, அவர்களுடைய குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்துள்ளனர். இதனால், மீட்பு விகிதம் 77 சதவீதம் ஆக உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.