புதுடெல்லி,
70 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டெல்லி சட்டமன்ற தேர்தலில், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் வந்து வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.
ஆம் ஆத்மி கட்சி தலைவரும், முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது குடும்பத்தினருடன், சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டு போட்டார். பாரதீய ஜனதா மூத்த தலைவர் எல்.கே அத்வானி மற்றும் அவரது மகள் பிரதிபா அத்வானி ஆகியோர் அவுரங்கசீப் லேனில் உள்ள வாக்குச்சாவடியில் தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவுரங்க சீப் சாலையில் உள்ள வாக்குச்சாவடி எண் 81&82 -ல் தனது வாக்கினை பதிவு செய்தார். புதுடெல்லி தொகுதிக்குட்பட்ட நிர்மன் பவன் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 114&116-ல் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர் வாக்களித்தனர்.