தேசிய செய்திகள்

டெல்லி: சிங்கு எல்லையில் சர்ச்சைக்குரிய வாசகம்; 3 பேர் கைது

கைது செய்யப்பட்ட அந்த 3 பேர் பிரீத்பால், ஹர்மிந்தர் சிங் மற்றும் ஷீஷ்பால் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

புதுடெல்லி

டெல்லி சிங்கு எல்லையில் சர்ச்சைக்குரிய காலிஸ்தான் ஆதரவு வாசகம் எழுதப்பட்ட சம்பவத்தில், 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

டெல்லியில் உள்ள சிங்கு எல்லை பகுதியில் உள்ள சுவர்களில், கடந்த 6-ந்தேதி சர்ச்சைக்குரிய வகையில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களை சிலர் எழுதியுள்ளனர். இதுதொடர்பாக சிறப்பு பிரிவு போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

3 பேர் கைது

இதில், பஞ்சாப்பில் உள்ள பரீத்கோட் பகுதியில் வைத்து 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள், இந்தியாவில் தடை செய்யப்பட்ட எஸ்.எப்.ஜே. என்ற சீக்கிய அமைப்பின் தலைவர் மற்றும் காலிஸ்தானிய பயங்கரவாதியான குர்பத்வந்த் சிங் பன்னூன் என்பவரின் அறிவுறுத்தலின்பேரில் அத்துமீறி செயல்பட்டு உள்ளனர்.

சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில், கைது செய்யப்பட்ட அந்த 3 பேர் பிரீத்பால், ஹர்மிந்தர் சிங் மற்றும் ஷீஷ்பால் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்கள் பயன்படுத்திய கார் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்களில் பிரீத்பால், பன்னூனுடன் நேரடி தொடர்பில் இருந்துள்ளார்.

அவருக்கு பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட பயங்கரவாத அமைப்புகளுடனும் தொடர்பு இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. அதுதொடர்பாகவும் விசாரிக்கப்பட உள்ளது. பிரீத்பாலுக்கு எதிராக உபா சட்டமும் முன்பே பதிவாகி உள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

SCROLL FOR NEXT