தேசிய செய்திகள்

மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா விடுவிப்பு

குற்றம்சாட்டப்பட்ட 23 பேருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது என டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் கூறியுள்ளது.

புதுடெல்லி,

2021-22-ம் ஆண்டி டெல்லி ஆம் ஆத்மி அரசு புதிய மதுபான கொள்கையை கொண்டுவந்தது. 2021 நவம்பர் மாதம் அரசு மதுபானக்கடைகளை மூடிவிட்டு தனியார் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது.கொள்கை விதியில் மாற்றப்பட்டு ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா கவிதா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். 2024-ல் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட நிலையில் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.சர்ச்சையை தொடர்ந்து 2022-ம் ஆண்டு டெல்லியில் புதிய மதுபான கொள்கை ரத்து செய்யப்பட்டது.

தனியார் நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றும் அரசுக்கு ரூ.2000 கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையையும் கடந்த ஜனவரி மாதம் நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்பட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 23 பேரையும் விடுவிப்பதாக டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்து பேசிய சிறப்பு நீதிபதி ஜிதேந்திர சிங்

ஆதாரங்களே இல்லாமல் சிபிஐயால் ஜோடிக்கப்பட்ட வழக்கு இது. எந்த குற்றமும் செய்யாமல் முதல்-மந்திரியாக இருந்த கெஜ்ரிவால் 156 நாள்களும், துணை முதல்-மந்திரியாக இருந்த சிசோடியா 530 நாள்களும் சிறையில் இருந்துள்ளனர். இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் பல குறைபாடுகள் இருக்கிறது. மதுபான கொள்கையில் எந்த சதித்திட்டமோ அல்லது குற்றவியல் நோக்கமோ இல்லை. வெறும் யூகத்தின் அடிப்படையில் ஒரு கதையை உருவாக்க சிபிஐ முயற்சித்திருக்கிறது.

வழக்கில் சாட்சியமோ, ஆதாரங்களோ இல்லாமல் நூற்றுக்கணக்கான பக்கங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிடுகிறது. குற்றம்சாட்டப்பட்ட 23 பேருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா சந்திர சேகராவின் மகள் கவிதா உட்பட 23 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஆதாரம் இல்லாமல் அவர்களை சிறையில் வைத்ததாக சிபிஐக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் பல குறைபாடுகள் இருப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.