தேசிய செய்திகள்

டெல்லி அரசுப் பள்ளி வகுப்பறையில் மின்விசிறி கழன்று விழுந்து மாணவி காயம்!

இந்த சம்பவத்தில் அப்பள்ளியில் பயின்று வந்த ஒரு மாணவி காயமடைந்தார்.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போது திடீரென மின்விசிறி கழன்று கீழே விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் அப்பள்ளியில் பயின்று வந்த ஒரு மாணவி காயமடைந்தார். மாணவியின் தலையில் மின்விசிறி விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக மாணவிக்கு பெரிய அளவில் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.

டெல்லியின் நாங்லோயில் உள்ள அரசுப் பள்ளியில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட அந்த மாணவி கூறியதாவது, "கடந்த 27ஆம் தேதி வகுப்புகள் நடந்து கொண்டிருந்த போது வகுப்பறையில் மின்விசிறி கீழே விழுந்தது.

கட்டிடத்தின் மேற்கூரையில் ஈரப்பசை இருந்ததால், அதில் இருந்து தண்ணீர் சொட்டு சொட்டாக விழுந்து கொண்டிருந்தது. இதனால் மேற்கூரை உடைந்து மின்விசிறி கீழே விழுந்தது" என்று மாணவி குற்றம் சாட்டினார்.

எனினும், இந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகத்திடமிருந்தோ அல்லது அரசிடமிருந்தோ உடனடியாக எந்த பதிலும் இல்லை.

SCROLL FOR NEXT